பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளரான ஷம்சுல் இஸ்கந்தர் அகின் மீது தொடரப்பட்டுள்ள ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய அவரது மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CPC) பிரிவு 417-ன் கீழ் வழக்கு மாற்றம் பெற வேண்டிய சட்டத் தகுதிகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா நூர்தின், அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
ஒரு குற்றவியல் வழக்கானது, சிக்கலான சட்டச் சிக்கல்களை எழுப்பும்போதோ அல்லது நீதியின் நலன் அத்தகைய இடமாற்றத்தை அவசியமாக்கும் போதோ, இத்தகைய வரையறுக்கப்பட்ட சில காரணங்களின் அடிப்படையில் மட்டுமே, கீழமை நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை, இப்பிரிவு அனுமதிக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டம் ஏற்கனவே நிலைபெற்றுள்ளது என்றும், கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய நீதிமன்ற முன்னுதாரணங்களிலிருந்து விலக வேண்டிய எந்த காரணமும் இல்லை என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், ஷம்சுலின் வழக்கறிஞர் அமீர் ஹம்சா அர்ஷாட், இந்த வழக்கில் புதுமையான சட்ட கேள்விகளும் சிக்கலான விவகாரங்களும் இருப்பதால், அவை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் கூட்டாட்சி நீதிமன்றத்திலும் தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியம் என வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








