கோலாலம்பூர், பிப்ரவரி.10-
பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டமான சொஸ்மாவில், 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டிருப்பதை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நியாயப்படுத்தியுள்ளார்.
எல்லை தாண்டிய புலம்பெயர்ந்தோர் கடத்தல் வழக்கில், அச்சிறுமி போலீசாரின் விசாரணைகளுக்கு தேவைப்படுவார் என்று சைஃபுடின் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போலீசாரால் அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட போது, அந்த வாகனத்தின் பயணிகள் இருக்கையில் அச்சிறுமி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது தந்தை ஒரு கடத்தல்காரர், அச்சிறுமி தான் அதற்கு முக்கியமான சாட்சி என்று சைஃபுடின் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், அச்சிறுமி 9 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்கு மியன்மார் நாட்டைச் சேர்ந்த குடியேறிகளைக் கடத்துவது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வந்த போது, அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








