இந்தியா, ஜூன் 20-
மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், 131 பயணிகளுடன் இந்தியாவில் ஹைதராபாத்- விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மலேசிய ஏர்லைன்ஸின் MH 199 விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஹைதராபாத்- ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
131 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.55 மணியளவில் அந்த போயிங் விமானம், ஹைதராபாத்- விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டது. எனினும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த போயிங் விமானம் அதிகாலை 3.58 மணியளவில் தெலுக்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்- விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அப்பேச்சாளர்தெரிவித்தார்.
மலேசிய நேரப்படி அந்த விமானம் காலை 7.10 மணியளவில் கோலாலம்பூர், அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வெளியிட்ட காணொளியின்படி, விமானத்தின் இயந்திரத்தில் அதிக இரைச்சலுடன் தீப்பொறி கிளம்பியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் விமானம் அவசரமாக தரையிறப்பட்டது தொடர்பில் மலேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ், இன்று மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.








