கோலாலம்பூர், பிப்ரவரி.24-
மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த 2015 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில், சிலாங்கூரில் மொத்தம் 1,575 வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரை அடுத்து, இரண்டாவது இடத்தில் ஜோகூர் மாநிலமும், அடுத்த நிலையில், சபா மற்றும் கெடா மாநிலமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோகூரில் மொத்தம் 806 வழக்குகள், சபாவில் 505 வழக்குகள் மற்றும் கெடாவில் 465 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பெர்லிஸ் மாநிலத்தில் 116 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாடெங்கிலும் பதிவான 17 ஆயிரத்து 609 சம்பவங்களில் 7 ஆயிரத்து 90 சம்பவங்களில் மட்டுமே, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.








