மலேசியாவில் வேலை செய்வதற்கு அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பின்னணியில் வங்காளதேசப்பிரஜைகள் உள்ளனர். நாட்டில் தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான அந்நிய நாட்டவர்கள் வேலையின்றி இருக்கின்றனர். இவர்கள் கடல்அலையைப் போல மலேசியாவில் குவிந்து இருப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பின்னணியில் வங்காளதேசிகள் ரன்னர்களாக ( Runner ) இருக்கின்றனர் என்று உள்ளூர் நாளிதழ் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பெயரளவில் மலேசியர்கள் பங்குதாரர்களாக இருந்த போதிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் வங்காளதேசிகள் 49 விழுக்காடு பங்குரிமையை கொண்டுள்ளனர். அந்த நிறுவனங்களில் செயல்பாட்டிற்கு வங்காளதேசிகளே மூளையாக இருந்து செயல்படுகின்றனர் என்று முன்னணி மலாய் நாளிதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தொழிலாளர்களை தருவிக்கும்படி மலேசிய நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்ற போதிலும் வங்காளதேசம், நேபாள், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் பலர், வேலையில்லாமல் பரிதவிப்பதற்கு இந்த நிறுவனங்களே முக்கிய காரணமாகும் என்று அந்த நாளிதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.
நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் வங்காளதேசிகள், மலேசியப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ள தங்கள் மனைவிமார்களின் பெயர்களில் அந்த நிறுவனங்களை வழிநடத்தி வருகின்றனர் என்ற உண்மையும் தெரியவந்துள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.








