சுங்கை பட்டாணி, டிசம்பர்.07-
கோலா மூடா, பண்டார் லகுனா மெர்போக் பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையின் போது, ஒரு முதிய பெண்ணைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய 30 வயதுடைய நபரைக் காவற்படையினர் கைது செய்தனர். இன்று காலை 8.45 மணியளவில் ஒரு முதிய பெண் தனக்கு வந்த மிரட்டல் குறித்துத் தகவல் கொடுத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்படை அதிகாரிகள் அந்த நபரை அவரது வீட்டில் வைத்து உடனடியாகக் கைது செய்ததாக கோல மூடா மாவட்டக் காவற்படை தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
தொடர் சண்டைகள் காரணமாகச் சந்தேக நபர் தனது அண்டை வீட்டாரைப் பிடிக்காமல் இருந்துள்ளார். இதன் காரணமாகவே ஆத்திரத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் காவற்படை நம்புகிறது. அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உரிமம் உள்ளதா, அல்லது சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்தாரா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும், சந்தேக நபர் போதைப் பொருள் சட்டங்களின் கீழும் விசாரிக்கப்படுவார் என்றும் காவற்படை உறுதிப்படுத்தியுள்ளது.








