அலோர் ஸ்டார், ஜனவரி.10-
சுங்கை பட்டாணியில் உள்ள, பெட்ரோல் நிலையம் ஒன்றில் நேற்று, வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு ரோன்95 பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணையைத் துவங்கியுள்ளது.
பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர், சம்பந்தப்பட்ட அந்த வெளிநாட்டு வாகனத்திற்கு, ரோன்95 பெட்ரோலை நிரப்புவது போலான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அந்த காணொளியின் உண்மைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் கெடா மாநில இயக்குநர் நிஸாம் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அந்த பெட்ரோல் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளும், விற்பனை ரசீதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், மலேசியாவில், வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் ரோன்95 பெட்ரோலை நிரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








