கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பினாங்கு மாநில போலீஸ் தலைவர் கௌ கொக் சினுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை போலீஸ் படை கடுமையாக கருதுவதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார். போலீஸ் படையை அச்சுறுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில போலீஸ் தலைவர் கௌ கொக் சினுக்கு போஸ் லாஜு மூலம் கடந்த ஜுன் முதல் தேதி அனுப்பிவைக்கப்பட்ட அனாமதேய கடிதத்தில் சவத்தின் மீது போடப்படும் கட்டமொய்ப் பணம் வைக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அக்ரில் சானி குறிப்பிட்டார்.
பினாங்கில் லைசென்ஸ்யின்றி செயல்படும் ஆலோங் கிற்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை பினாங்கு போலீசார் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் கடைகள் மற்றும் போலீஸ் நிலையம் எரிக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்ரில் சானி சுட்டிக்காட்டினார்.
இது போன்ற மிரட்டலுக்கு போலீஸ் படை அஞ்சாது என்று குறிப்பிட்ட அக்ரில் சானி, இந்த அனாமதேய கடிதம் தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








