பினாங்கு, ஜாலான் பினாங்கில் உள்ள முன்னாள் ஒடியோன் திரையரங்கக் கட்டிடத்தில் கடந்த மே 30 அன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு, புதுப்பித்தல் பணியின் போது உலோகம் வெட்டப் பயன்படுத்தப்பட்ட 'ஆக்ஸி-அசிட்டிலீன்' கருவியே காரணம் எனப் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் உலோகம் வெட்டும் போது உருகி விழுந்த துகள்கள், கீழே இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது விழுந்ததே தீ விபத்துக்குக் காரணம் என்பது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 56 வயதான மியான்மர் தொழிலாளி போஷி ஒருவர் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை என்றும், இது ஒரு விபத்து என்றும் போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.








