செனாய், பிப்ரவரி.08-
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மோசடிகள் தொடர்பான 20,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளது.
இது குறித்துத் தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறுகையில், மொத்த பதிவுகளில் 15,519 பதிவுகள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பானவை என்றும், 5,421 பதிவுகள் மோசடிகள் தொடர்பானவை என்றும் தெரிவித்தார்.
உள்ளடக்கக் கட்டுப்பாடு அல்லது நீக்கம் என்பது அந்தந்த சமூக ஊடக நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. எம்சிஎம்சி புகார்களைப் பெற்று, அத்தகைய தீய உள்ளடக்கங்கள் அகற்றப்படுவதை உறுதி செய்ய அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்று ஜோகூர், செனாயில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் தியோ நீ சிங் கூறினார்.
பொறுப்பற்ற தரப்பினரால் அதிக மக்களைச் சென்றடைய நிதியளிக்கப்படும் 'கட்டண விளம்பரங்கள்' மூலம் ஆன்லைன் மோசடி மற்றும் சூதாட்ட சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது குறித்து தியோ கவலை தெரிவித்தார்.
இதன் விளைவாக, புகார்கள் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளடக்கத்தைச் சோதிக்கும் முறையை வலுப்படுத்துமாறு சமூக ஊடக நிறுவனங்களை எம்சிஎம்சி வலியுறுத்தி இருப்பதையும் தியோ நீ சிங் சுட்டிக் காட்டினார்.








