கோலாலம்பூர், ஜனவரி.28-
ஒருங்கிணைந்த குற்றவியல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக கேப்டன் பிரபா கும்பலை சேர்ந்த மூன்று பேர் மீது இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
38 வயது நவீந்திரன் ராஜ் குமரேசன், 30 வயது பிரதிப்குமார் செல்வராஜ் மற்றும் 30 வயது ஸ்ரீதரன் சுப்ரமணியம் ஆகியோர் நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தமிழ்மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அந்த மூவரும், தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதற்கான அடையாளமாக நீதிமன்றத்தில் தலையசைத்தனர்.
மூவருக்கு எதிரான வழக்கு சொஸ்மா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் இவ்வழக்கை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் தெரிவித்தார்.
இந்த மூவரும் கடந்த 2023 டிசம்பர் முதல் 2025 செப்டம்பர் 11 வரை கோலா லங்காட், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் பனைத் தோட்டத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கை அரசு தரப்பில் துணை அரசு பப்ளிக் பிராசிகியூட்டர்களான ஷாஃபிக் ஹாசிம், வி வி சுலோஷனி மற்றும் லீனா ஹானினி இஸ்மாயில் ஆகியோர் கையாண்டனர்.
முன்னதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை சிஜடி இயக்குனர் எம் குமார் கூறுகையில், ஜனவரி 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, இந்திய செய்தி இணையத்தளமான NDTV வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மூன்று மலேசிய மலேசியர்கள், மீண்டும் மும்பைக்கு அனுப்பப்பட்டு, அதிகாரிகளால் வளைத்து பிடிக்கப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர்கள், இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்பின் கீழ் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.








