புத்ராஜெயா, மே.27-
வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வரவிருந்த மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம், மற்றொரு தேதி அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான சேவை தடையின்றி கிடைப்பதையும், கடப்பிதழ் வழங்கும் செயல்முறையை மேலும் சீரமைப்பதையும் உறுதிச் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களின் கடப்பிதழ்களை வழக்கம் போல் புதுப்பித்துக் கொள்ளலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள கடப்பிதழ்கள், அவற்றின் காலாவதி தேதி வரை செல்லுபடியாகும்.
புதிய கடப்பிதழ் அமலாக்கம் தொடங்கும் புதிய தேதி மற்றும் கூடுதல் விவரங்கள் குடிநுழைவுத்துறையால் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஸாகாரியா குறிப்பிட்டார்.








