ஜோகூர், கோத்தா திங்கி அருகே திடீரென சாலையைக் கடந்த யானை மீது கார் மோதியதில், அதில் பயணித்த மூவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 10.50 மணியளவில், ஜாலான் ஜோகூர் பாரு–மெர்சிங் சாலையின் 49 ஆவது கிலோமீட்டரில் நடந்ததாக கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரடெண்டன் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.
கோத்தா திங்கியிலிருந்து மெர்சிங் நோக்கிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா காரில், ஓட்டுநர் உட்பட மூவர் பயணம் செய்தனர்.
சாலையில் திடீரென யானை குறுக்கிட்டதால், அதனைத் தவிர்க்க முடியாமல் காரின் பின்புறத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் இரு பயணிகளுக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்த மோதல் தொடர்பான ஏழு விநாடி காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.








