காஜாங்கில் ஒரு பேரங்காடி மையத்தில் உள்ள நகைக்கடையில் நேற்று திங்கட்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 32 லட்சம் வெள்ளியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நகைகளின் மொத்த மதிப்பு குறித்து உறுதி செய்யப்பட்டப் பின்னர் நகைக்கடை உரிமையாளர் இதனை போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் நசீர் த்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளை தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதுவரையில் 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதுகாவலர் உடை, முகமூடி, கையுறை அணிந்த நான்கு கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நிகழ்ந்தியுள்ளனர். அவர்கள் இரண்டு கைத்துப்பாக்கி, ஒரு நீண்ட துப்பாக்கியை வைத்து இருந்தனர். கொள்ளையடிப்பதற்கு முன்பு, ஓர் எச்சரிக்கை வேட்டையும் கிளப்பியுள்ளனர்.
நகைகளை கொள்ளையடித்தப்பின்னர் அந்த பேரங்காடி மையத்தின் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து தப்பித்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையர்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளதாக முகமட் நசீர் குறிப்பிட்டார்.








