கோலாலம்பூர், டிசம்பர்.07-
மலேசியாவில் குழந்தைகள் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்திலும் 2012 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. CRC எனப்படும் ஐ.நா.வின் குழந்தை உரிமைகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக நிலையிலான கலந்துரையாடலுக்கு மலேசியா தயாராகி வருகிறது.
இந்தச் சட்டத் திருத்தங்கள், சிறுவர் திருமணம், சிறுவர் கருத்தரிப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளில் அரசின் கொள்கைகள் CRC-யின் தேவைகளுடன் ஒத்துப் போகின்றனவா என்பதை உறுதிச் செய்வதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கொள்கைகள் குறித்த முடிவுகளை எடுப்பதற்காக, அரசு சார்பற்ற நிறுவனங்கள், வல்லுநர்கள், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் போன்ற பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட ஒரு சிறப்புத் திட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி உறுதிப்படுத்தினார்.








