Feb 27, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் காதலியின் 3 வயது மகனைத் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை
தற்போதைய செய்திகள்

முன்னாள் காதலியின் 3 வயது மகனைத் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

Share:

கிள்ளான், பிப்ரவரி.27-

தனது முன்னாள் காதலியின் மூன்று வயது மகனை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 33 வயது எஸ். தவேந்திரகுமார் என்பவருக்கு, கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

அந்த பச்சிளம் பாலகனை ரப்பர் குழாய், இடைவாறு பட்டை, துணி மாட்டும் ஹேங்கர் போன்ற சாதனங்களால் அடித்துக் கொன்றதாக தவேந்திரகுமார் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் கிள்ளான், தாமான் செந்தோவில் உள்ள ஒரு வீட்டில் தனது முன்னாள் காதலியின் மகனுக்கு இத்தகைய கொடூரத்தை அந்த ஆடவர் இழைத்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மூன்று நாட்களாகத் தொடர்ந்த இந்தச் சித்ரவதையால் அவதியுற்று வந்த அந்தச் சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தான். இந்தக் கொடுமைகள் அனைத்தும் அச்சிறுவனின் தாயின் முன்னிலையிலேயே நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி நோர்லிஸா ஒத்மான் தனது தீர்ப்பில், "பாதிக்கப்பட்ட சிறுவன் மிகவும் சிறியவன் மற்றும் பலவீனமானவன். அவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் ஈடாகாது" என்று குறிப்பிட்டார்.

Related News