ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயத்தை உடைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு செலாயாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, யாயாசன் குப்ரா அமைப்பானது இடிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் அவ்விடத்தில் அமைந்துள்ள அந்த ஆலயமானது, கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய உரிமையாளர் வசம் சென்றுள்ளதாக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி சாய் குவான் ஹாக் தெரிவித்துள்ளார்.
நிலைமை சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அந்த இடம் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் என்று நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது வரும் ஜூன் 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும், அதுவரை ஸ்டேட்டஸ் குவோ என்ற தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








