கிள்ளான், நவம்பர்.12-
கோலக்கிள்ளான், பண்டமாரானில் கம்போங் பாபான் நிலப் பகுதியைச் சேர்ந்த சில குடியிருப்பாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கள் வீடுகளிலிருந்து இன்று காலையில் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குடியிருப்பாளர்களை வீடுகளிலிருந்து அகற்றும் பணியின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பல ஆண்டு காலமாக குடியிருந்து வரும் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவதை குடிப்பாளர்கள் சிலர் கண்டித்தனர். போலீசாரின் பணிக்கு குறுக்கீடு செய்தனர். சிலர் கண்ணீர் விட்டனர்.
இந்தியர்களும், சீனர்களும் லாட் நிலங்களில் பல ஆண்டு காலமாக குடியிருந்த நிலையில் அவ்விடத்தைக் கொள்முதல் செய்த மேம்பாட்டாளர் நிறுவனம் நீதிமன்ற உத்தரவு பெற்று குடியிருப்புகளைக் காலி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கம்போங் பாபான் நிலப் பகுதியில் குடியிருந்தவர்களில் பெரும் பகுதியினர் கோலக்கிள்ளான் துறைமுகத்தில் வேலை செய்தவர்கள் ஆவார்.
வீடுகளைக் காலி செய்யும் பணியின் போது, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரம்லி காசாவும் உடன் இருந்தார். வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவில் 20 வீடுகள் சம்பந்தப்பட்டு இருந்தன.








