பாச்சோக், மார்ச்.01-
கெடா, செர்டாங் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்தவர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்த தேசிய போதைப் பொருள் ஒழிப்பு முகமையின் உதவிக் காவற்படை அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதைப் பொருள் விநியோகம் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ‘வேலியே பயிரை மேய்ந்தது’ போன்ற இந்தச் செயல் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுவதால், விரிவான உள் விசாரணைக்குப் பிறகே இந்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.








