Mar 30, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

Share:

மலாக்கா, நவ.8-

மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், பழைய நானிங் திருக்கோவிலான ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில், முருகப்பெருமானின் உன்னத உற்சவங்களில் ஒன்றான கந்த சஷ்டி விரத விழா, நேற்று வியாழக்கிழமை சூரசம்ஹாரத்துடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

கந்தசஷ்டி விழா சிறப்பு பூஜைகள், கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஆறாவது நாளான நேற்று வியாழக்கிழமை விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

முருகப்பெருமான், சூரனை வதம் செய்த பெருமையை உணர்த்தும் இவ்விழாவின் பூஜைகள் யாவும் ஆலயத்தின் பிரதான குருக்கள், ஜோதிடர், ஆஞ்சநேய உபாசகர் சிவஸ்ரீ கு. நவதாஸ சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவின் உற்வச நாளான நேற்று மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகத்துடன் நிகழ்வு தொடங்கியது. நித்திய பூஜை, வசந்த மண்டப பூஜை, சூரசம்ஹார உற்சவம் நிறைவேற்று, பிராச்சித்த அபிஷேகம் மற்றும் கந்த சஷ்டி பாராயணம், தீபாராதனை, விபூதி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக, நிகழ்விற்கு சிகரம் வைத்த, சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது. மேளதாள நாதஸ்வர மங்கல முழக்கத்துடன் பக்த பெருமக்கள், சூரபத்மனை பல்லக்கில் சுமந்த வண்ணம், ஊர்வலமாக வந்து, மூன்று முறை முன்னும் பின்னும் கொண்டு சென்றப்பின்னர் முருகன் வதம் செய்யும் காட்சி, காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

ஆலயத்தின் கந்த சஷ்டி விரத பூஜை விரத விழா சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய பக்தபெருமக்களுக்கும், ஆலய நிர்வாகத்திற்கும் ஆலயத்தின் பிரதம குருக்கள், சிவஸ்ரீ கு. நவதாஸ சர்மா குருக்கள் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கந்த சஷ்டி விழாவில் கலந்து சிறப்பித்தது போல் ஆலயத்தில் அடுத்த நடைபெறக்கூடிய மாதாந்திர கார்த்திகை, மாதாந்திர சஷ்டி நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு மெய்யன்பர்களை பிரதம குருக்கள் கேட்டுக்கொண்டார்.

Related News