குவாந்தான், டிசம்பர்.06-
நாடு தழுவிய நிலையில் நேற்று பிற்பகலில் கொட்டித் தீர்த்த அடைமழையில் பகாங், ரவூப், கம்போங் உலு சுங்கை கிராமம் வெள்ளக்காடானது. மூன்றாவது முறையாக ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உலு சுங்கை கிராம மக்கள், இன்று விடியற்காலை 4.30 மணியளவில் அவசர, அவசரமாக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதிக்கு பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய வெள்ள சீற்றமாக இது கருதப்படுகிறது. அதிகாலையில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் மற்றும் பொது தற்காப்பு படையினர், கிராமம் ஒரு தீவுப் போல் காட்சித் தந்த வெள்ளத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
23 குடும்பங்களை சேர்ந்த 60 க்கும் மேற்பட்டவர்கள், அவர்களின் வீடுகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் காலை 7.45 மணியளவில் கம்போங் உலு சுங்கை, பாலாய் ராயா பொது மண்டபம் திறக்கப்பட்டது.








