கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-
கோலாலம்பூர் மாநகரில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் சீரான செயலாக்க நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யும் என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா தெரிவித்தார்.
இத்தகைய இயற்கைப் பேரிடர்களைச் சமாளிப்பதற்கான சிறந்த நடவடிக்கைகளை எடுக்க வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை போன்ற தொடர்புடைய தரப்பினருடன் மாநகர் மன்றம் இணைந்து செயல்படும் என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூரில் திடீர் வெள்ள அபாயம் உள்ள இடங்களை மாநகர் மன்றம் அடையாளம் கண்டு வருகிறது என்று அதன் டத்தோ பண்டார் டாக்டர் மைமூனா முஹம்மது ஷெரீப் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஜலேஹா, அதிக மழைப் பொழிவைத் தொடர்ந்து தண்ணீர், மிக வேகமாக உயர்ந்ததால் அங்கு வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.








