Mar 31, 2026
Thisaigal NewsYouTube
வாணவேடிக்கையின் போது தீ: 2 சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டு
தற்போதைய செய்திகள்

வாணவேடிக்கையின் போது தீ: 2 சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டு

Share:

தெலுக் இந்தான், நவ.22-


கடந்த வாரம், தெலுக் இந்தானில், டேவான் அரேனா ஸ்குவர் தெலுக் இந்தான் மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவின் போது, மண்டபத்திற்கு வெளியே வாணவேடிக்கை நடத்தி, அதன் தீ பொறி, அந்த மண்டபத்தில் கூரையில் விழுந்து தீச் சம்பவத்தை ஏற்படுத்தியதாக இரண்டு சகோதரர்கள் தெலுக் இந்தான் செஷன்ஸ் மற்றும் மாஜிஸ்ரேட் நீதிமன்ங்களில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

19 வயது ஜேசன் ஜோன் மிக்காலே மற்றும் அவரின் அண்ணன் 24 வயது ஸ்டீவன் ஜோன மிக்காலே ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட இரு சகோதரர்கள் ஆவர்.

ஜேசன் ஜோன் மிக்காலே , செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர்ஹமிஸா ஷரிபுடின் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் அவரின் அண்ணன் ஸ்டீவன் ஜோன மிக்காலே மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இவ்விரு சகோதரர்களும் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இரவு 11.29 மணியளவில் ஹிலிர் பேராக் மாவட்டத்திற்கு உட்பட்ட தெலுக் இந்தான், ஜாலான் ராஜாவில் உள்ள டேவான் அரேனா ஸ்குவர் தெலுக் இந்தான் மண்டபத்திற்கு தீ வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்ற நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இரு சகோதரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் இரு சகோதரர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று முடியும் வரையில் ஜேசன் ஜோன் மிக்காலேவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிம் வெள்ளி ஜாமீனிலும், ஸ்டீவன் ஜோன மிக்காலேவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரத்து 500 வெள்ளி ஜாமீனிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இரு சகோதரர்களும் தங்கள் தந்தையுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

Related News