இந்தியாவிலிருந்து பிரபல நடிகர்கள், நடிகைகள், இசையாமைப்பாளர்கள், கலைஞர்கள் என திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து மாபெரும் தமிழ் கலை நிகழ்ச்சிகளை படைப்பதில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக விளங்கி வரும் மலேசிய தொழில் அதிபர் டத்தோ மாலிக் டஷ்திகீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று அதிகாலையில் அவரை கைது செய்தது. மாலிக் ஸ்ட்ரீம் கொர்பொரேஷன் சென்டிரியான் பெர்ஹாட்,மாலிக் மாஜு சென்டிரியான் பெர்ஹாட், மாலிக் ஸ்ட்ரீம் ப்ரொபெர்டீஸ் சென்டிரியான் பெர்ஹாட்,மாலிக் ஸ்ட்ரீம் அந்தென்னா மூவீஸ் சென்டிரியான் பெர்ஹாட் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம் ப்ரொடக்ஷன் டிஸ்ட்ரிபுஷன் முதலிய நிறுவனங்களின் உரிமையாளரான டத்தோ மாலிக் பிடிபட்டதை எஸ்பிஆர்எம் உறுதிபடுத்தியது.
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை விநியோகம் செய்யும் உரிமையும், அந்தப் படத்தை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்து விநியோகிக்கும் உரிமையைப் பெற்று, பிரபலம் அடைந்தவரான டத்தோ மாலிக், சட்டவிரோத பண மாற்றத்தை துடைத்தொழிக்கும் 2 முக்கிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதப் பண மாற்றம் தடுப்புச் சட்டம் பயங்கரவாத நிதி அளிப்பு,சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் டத்தோ மாலிக் தடுத்து கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒருவர் “அம்லா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அவரின் சொத்துக்கள் உடனடியாக முடக்கப்படும். அந்த சட்டத்தின் கீழ் டத்தோ மாலிக், புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
மாலை 5.00 மணி வரையில் டத்தோ மாலிக் விடுவிக்கப்படவில்லை. அவர் இன்னமும் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார் என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்தது.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, மீசல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட டத்தோ மாலிக், சிறுவயதில் துணிக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு தமது தொழில் சாம்ராஜ்யத்தை பெருக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. பண மாற்றம், திரைப்பட விநியோகிப்பு, திரைப்படத் தயாரிப்பு, கலைநிகழ்ச்சி ஏற்பாடு, இந்தியாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி உட்பட பலதரப்பட்ட வர்த்தகத்தை டத்தோ மாலிக் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


