அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை புத்ராஜெயா மறுத்துள்ளது.
அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறுகையில், இந்தத் தகவல் வங்கதேசத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரால் வெளியிடப்பட்டதாகவும், அது அந்நாட்டு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
நேற்று வங்கதேச துணை அமைச்சர் மீர் ஷாஹே ஆலம் வெளியிட்ட தகவலில் , அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியா அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 1,476 அகதிகள், தாங்கள் விருப்பத்துடன் நாடு திரும்புவதாகக் கூறி ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.
மியான்மர் இன்னும் பாதுகாப்பான நாடாக இல்லாத நிலையில், அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்த ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் கவலை தொடர்பாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கம் அளித்ததாகவும் ஃபஹ்மி கூறினார்.








