குவாந்தான், பிப்ரவரி.09-
கடந்த சனிக்கிழமை, குவாந்தான் மாநிலம், ஜாலான் டத்தோ வோங் ஆ ஜாங் பகுதியில், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை, போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று, பிற்பகல் 3.15 மணியளவில், ஜாலான் கம்பூட் வழியாக நகரத்தை நோக்கி, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றைப் போலீசார் நிறுத்த முயன்ற போது, அக்காரானது நிற்காமல் சென்றதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிவேகமாகச் சென்ற அக்காரானது 5 கார்களை மோதி விபத்திற்குள்ளானது.
இதனையடுத்து, அக்காரிலிருந்து வெளியேறிய சந்தேக நபர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இருப்பினும், போலீசார் அந்நபரை விரட்டிச் சென்று பிடித்த போது, அவரிடம் 2 ஆயிரத்து 300 ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.








