பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், ஆப்பிள் ஐ.ஓ.எஸ் சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் உடனடியாக அதன் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எம்.சி.எம்.சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டார்க் சுவார்ட்” எனப்படும் மோசடி சங்கிலி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஐபோன் சாதனங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயன்படுத்தப்பட்டால், சாதனங்கள் ‘ஹேக்’ செய்யப்படுவதற்கும், அனுமதியற்ற அணுகலுக்கும் வழிவகுக்கலாம் என்றும் எம்.சி.எம்.சி எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, பயனர்கள் தங்களது சாதனங்களை சமீபத்திய ஐ.ஓ.எஸ் பதிப்பிற்கு அப்டேட் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பற்ற சாதனங்கள் அனுமதியின்றி கண்காணிப்பு மற்றும் உளவு செயல்பாடுகளுக்கு உள்ளாகலாம் என்றும் எம்.சி.எம்.சி எச்சரித்துள்ளது.








