கோலாலம்பூர், மார்ச்.01-
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், வான்வெளி மூடல் காரணமாகப் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா உறுதி அளித்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய சிற்றரசு, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
தற்போதைய சூழல் நிலையற்றதாக இருப்பதால், பயணிகள் தங்களின் பயண அட்டவணை குறித்துச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியர்கள் 'E-Konsular' தளத்தில் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் மலேசிய வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கும் அவசர உதவிகளுக்கும் அமைச்சின் செயல்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.








