மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிக்குத் துப்பாக்கிகள் மற்றும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்காக 2 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய
டத்தோஸ்ரீ சைஃபுதீன், கடந்த பிப்ரவரி மாதம் கெடா, புக்கிட் காயு ஈத்தாமில் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி தளபதியின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லையில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நிதி ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
20-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து இந்த எல்லை பாதுகாப்பு ஏஜென்சி உருவாக்கப்பட்டுள்ளதால் எல்லையில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைக்கப்படும் என்றும், முதல் ஆண்டிலேயே இந்த ஏஜென்சி பல கோடி ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளதாகவும் அமைச்சர் சைஃபுதீன் பெருமிதம் தெரிவித்தார்.








