நீலாய், பிப்ரவரி.04-
கடந்த திங்கட்கிழமை ஜாலான் சிரம்பான்- நீலாய் பகுதியில் ஓடிக் கொண்டிருந்த காரில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 20 வயது இளைஞர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அளித்த புகாரின் படி, நீலாய்க்கு செல்லும் வழியில், பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக நீலாய் போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞரும், அப்பெண்ணும் ஒரே காரில் பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென காரிலிருந்து அவர் வெளியே விழுந்ததாக நம்பப்படுகின்றது.
20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், சம்பவ இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மதியம் 12.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவமானது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு, அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.








