சுமார் 128.34 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக 58 வயது தொழிலதிபர் ஒரு ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
பி. ஷைலன் என்ற அந்த தொழில் அதிபர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து தமது சொந்த நிறுவனத்திற்கு இந்தப் பணத்தைப் பரிமாற்றம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொழில் அதிபர் ஷைலன், மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரை ஒரு லட்சம் ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
வழக்கு விசாரணை முடியும் வரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த தொழில் அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் SPRM சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








