காரினால் மோதி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 40 வயதான போலீஸ் இன்ஸ்பெக்டர் கமது கமல் ராஜ் சண்முகம் ஜாமீனில் விடுவிக்கப்படாமல் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மூன்று ஆண்டுகளாக கமல் ராஜ் 'ஸ்கிசோஃப்ரினியா' எனும் தீவிர மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக அவரது வழக்கறிஞர் நந்த கோபன் தெரிவித்தார். அவர் முறையாக மருந்து உட்கொள்ளாததால் நிலைமை மோசமடைந்ததாகவும், அவரை வீட்டில் வைத்திருப்பதை விட மருத்துவமனையில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்றும் குடும்பத்தினர் கருதுகின்றனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மசுலியானா அப்துல் ரஷித், அவரை ஒரு மாத கால மனநலப் பரிசோதனைக்காகப் பேராக், உலு கிந்தாவில் உள்ள பஹாகியா மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், அவர் மனநிலை சரியில்லாத காரணத்தால், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கத் தகுதியற்றவர் எனத் தற்காப்புத் தரப்பு வாதிட்டது. இதனால் பிணை வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








