Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை அவமதிப்பதா? அருண்துரை சாமியிடம் புக்கிட் அமான் விசாரணை
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை அவமதிப்பதா? அருண்துரை சாமியிடம் புக்கிட் அமான் விசாரணை

Share:

கிள்ளானில் பள்ளிவாசல் ஒன்றில் ஓர் இளைஞரின் மதமாற்ற சடங்கிற்கு தலைமை தாங்கிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் செயல் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்ட டிக்டாக் காணொலி தொடர்பாக, இந்து ஆகம அணி தலைவர் அருண் துரைசாமியிடம் போ​லீசார் விசாரணை நடத்தி வருவதாக புக்கிட் அமான் போ​​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

அருண் துரைசாமி நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஒரு மணி நேரம் வரை, விசாரணை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு டிக் டோக் காணொளி​யில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஒரு நாட்டின் பிரதமர் தனிப்பட்ட முறையில் சென்று ஒருவரை மதம் மாற்றுவது சரியான நடவடிக்கையா? என்று அருண் துரைசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

1955 ஆம் ஆண்டு சிறிய குற்றங்கள் தொடர்புடையு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504, மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்​லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அருண் துரைசாமி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முகமது ஷுஹைலி முகமட் ஜைன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க மேற்கண்ட சட்டம் வகை செய்கிறது.

பிரதமர் அன்வாரை அவமதிக்கும் வகையில் அருண்துரை சாமி அந்த காணொலியை வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஒரு நபரை அவமதித்து, அதன் ​மூலம் பொது மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ​மூட்டி, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் சட்டத்தின் ​கீழ் அருண் துரைசாமியிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News