செலாயாங், பிப்ரவரி.01-
சிலாங்கூர், தாமான் போல்டன் பகுதியில் உள்ள டுரியான் கடையை இடிப்பதற்கோ அல்லது அகற்றுவதற்கோ தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது செலாயாங் நகராட்சி மன்றம். சம்பந்தப்பட்டப் பகுதி தனியாரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த இடத்தின் வாடகை, மேலாண்மை விவகாரங்களில் நகராட்சி மன்றத்திற்கு நேரடித் தொடர்பு இல்லை என்று அதன் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகாரையும், காணொளிகளையும் குறித்துத் தாங்கள் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட MPS, இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கடை உரிமையாளர் ஏற்கனவே மூன்று காவற்படைப் புகார்களை அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் நிலவும் தவறான புரிதல்களைத் தவிர்க்கவே இந்த விளக்கம் அளிக்கப்படுவதாக செலாயாங் நகராட்சி மன்ற நிர்வாகம் கூறியுள்ளது.








