கோலாலம்பூர், பிப்ரவரி.27-
சில தினங்களுக்கு முன்பு, ரவாங்கில் உடைக்கப்பட்ட ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரர் ஆலயம் தொடர்பாக, நீதிமன்றத்தின் வெளியேற்ற உத்தரவு வரும் வரை பொது அமைதிக்குக் குந்தகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கக் கோரி அதன் நிர்வாகக் குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய நிர்வாகத்தின் சார்பில் இந்த வழக்கு இன்று காலை ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நில உரிமையாளர் மற்றும் மூன்றாம் தரப்பினர் "சட்டவிரோதமாகக் கோயிலை உடைப்பதை " தடுத்து, ஆலயத்தின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh Sohanpal தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடியும் வரை, கோயிலை இடிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி, இந்தக் கோயிலை இடிக்க முயன்றதாகக் கூறப்படும் நான்கு நபர்களைக் போலீஸ் துறையினர் கைது செய்தனர்.
கோயில் நிர்வாகத்துடனோ அல்லது உள்ளூர் அதிகாரிகளுடனோ எந்த ஆலோசனையும் நடத்தாமல் அவர்கள் கோயிலின் ஒரு பகுதியை இடித்தது விசாரணையில் தெரிய வந்தது என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பக்தர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் உதவியுடன் கோயிலின் நான்கு சிலைகள் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், எவ்வித அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்றும் டத்தோ ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தினார்.
எனினும் ஆலயத்தின் பொறுப்பாளர்கள் ஆஜராகாமலேயே சிலைகள் அகற்றப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் குற்றஞ்சாட்டியிருந்தார்.








