கோலகங்சார் நகராண்மைக் கழகத்தின் தொழிலாளர் இயக்கத்தின் சுங்கை சிப்புட் கிளை ஏற்பாட்டில் தந்தையர் தின விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சுங்கை சிப்புட், ஃபோங் மோன் உணவக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இயக்கத்தின் ஆலோசகர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற தந்தையர் தின விழாவில் சுங்கை சிப்புட் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டதுடன், நிகழ்விற்கு முன்னாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் சிறப்பு வருகை புரிந்தார்.
நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் 50 தந்தையர்கள், ஒரே நேரத்தில் 50 மேஜைகளில் தந்தையர் தின அனிச்சலை வெட்டி, விழா நாயகர்கள் என்ற மு றையில் தந்தையர்களுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டது.
ஆடல், பாடல் இசை நிகழ்வுடன் நடைபெற்ற தந்தையர் தின விழாவில் சுங்கை சிப்புட் பெருந்தகை அமுசு. ஏகாம்பரம் சிறந்த தந்தையராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு செய்யப்பட்டதுடன், சற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறந்த தந்தையர்களுக்கும் உரிய கெளரவிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த டான்ஸ்ரீ கேவியஸ் கூறுகையில் அரசியலுக்கு வராமலேயே ஓர் அரசு சாரா இயக்கமான என்.ஜி.ஓ- மூலமாக மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு கோலகங்சார் நகராண்மைக் கழகத்தின் தொழிலாளர் இயக்கத்தின் சுங்கை சிப்புட் கிளை ஓர் முன்னுதாரணம் என்று புகழாரம் சூட்டினார்.
தந்தையர் தினம் என்பது ஓர் உணர்வுப்பூர்வமான நாளாகும். அன்றைய நாளில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உள்ள சிறந்த தந்தையர்களை கெளரவிக்கும் நோக்கில் ஆண்டு தோறும் இவ்விழா நடத்தப்பட்டு வருவதாக இயக்கத்தின் ஆலோசகர் நடராஜன் தெரிவித்தார்.
இவ்வியக்கத்தின் ஆலோசகர் நடராஜனின் சீரிய முயற்சியில் நடத்தப்பட்ட இவ்விழா, சுங்கை சிப்புட்டைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான நிகழ்வாகும் என்று இவ்விழாவில் சிறந்த தந்தையராக தேர்வு செய்யப்பட்ட அமுசு. ஏகாம்பரம் புகழாரம் சூட்டினார்.
எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற இயக்கத்தை சேர்ந்த மாரியப்பனின் புதல்விக்கு சிறு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டது.
தவிர, சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் வசதிகுறைந்தவர்களுக்கு அன்பளிப்புப் பைகளும் இயக்கத்தின் சார்பில் வழங்கி, உதவி நல்கப்பட்டது.








