மெர்சிங் , ஆகஸ்ட் 24-
தமது காதலுடன் இரவுப் பொழுதை உல்லாசமாக கழிப்பதற்காக தமது குடும்பத்தினரிடம், தாம் கடத்தப்பட்டு விட்டதாக பொய்யுரைத்த 24 வயது பெண்ணின் ஏமாற்று வேலை, கடைசியில் அம்பலமானதாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அப்துல் ரசாக் அப்துல்லாஹ் சனி தெரிவித்துள்ளார்.
மெர்சிங்கை சேர்ந்த அந்தப் பெண் நேற்று பாதுகாப்பாக திரும்பியப் பின்னர் தாம் கடத்தப்பட்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பொய்யுரைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
அதற்கு முன்னதாக, நேற்று முன் தினம் மாலையில் அந்தப் பெண், தனது குடும்பதினருக்கு அளித்த தகவலின்படி அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரால் தாம் கடத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் அந்த குடும்பத்தினரின் புகாரைப் பெற்றப் பின்னர் அந்தப் பெண்ணை தேடும் நடவடிக்கையை போலீசார் முடுக்கிவிட்டனர்.
ஆனால், அந்தப் பெண், ரொம்பின் -னில் தனது காதலுடன் இரவு பொழுதை உல்லாசமாக கழித்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமானது..
இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணுடன் ஒன்றாக இருந்ததாக நம்பப்படும் 26 மற்றும் 24 வயதுடைய இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக சுப்பரின்டென்டான் அப்துல் ரசாக் தெரிவித்தார்.








