கோலாலம்பூர், நவ. 12-
பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாகவும் அவை தொடர்பான சந்திப்புக்களை நடத்துவதற்கு அனுமதித்ததாகவும் உயர் கல்விக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஜோகூர், பூலாயைச் சேர்ந்த 70 வயது அப்துல்லா டாவுட் என்ற அந்த முன்னாள் விரிவுரையாளர், உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டியின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோகூர், கங்கார் பூலாய், கம்போங் மிலாயுவில் புரிந்து வந்ததாக அந்த முன்னாள் விரிவுரையாளருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
Daes தீவிரவாத கும்பலின் சிந்தாந்தங்களை அந்த முன்னாள் விரிவுரையாளர் பரப்பியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130, ஜி பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








