கோலாலம்பூர்,ஜன.9
மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் கெப்போங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பாளரை அச்சுறுத்தி பணம் பறித்ததாக சம்பந்தப்பட்ட நபர், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்துஅந்த நான்கு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
29 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு போலீஸ்காரர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தை போலீஸ்துறை கடுமையாக கருதுகிறது. குற்றம் இழைத்தவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் அவர்கள் தற்காக்கப்பட மாட்டார்கள் என்று டத்தோ அலாவுதீன் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களின் புகாரை எடுக்க மறுத்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் கோலாலம்பூர் நேர்மை மற்றும் புகார் பிரிவு போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.








