கடும் மழை காரணமாக கடந்த சனிக்கிழமை கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக உடனடி நடவடிக்கை திட்டத்தை வகுக்க சம்பந்தப்பட்ட அரசாங்க சார்பு நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுடன் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ இன்று ஒரு அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பெட்டாலிங் ஜெயா மாநகர்மன்றம், மேம்பாட்டாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப முகாமைகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.
வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்ட காலத் தீர்வுகளுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜசேகா தலைவருமான கோபிந்த் சிங் தெரிவித்தார். சாலைகள், ஆற்றங்கரைகள் மற்றும் அருகிலுள்ள வீடுகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், எந்தவொரு பழுதுபார்ப்பு அல்லது தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொதுமக்களின் பாதுகாப்பே முதலிடமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








