கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-
நாளை ஞாயிற்றுக்கிழமை Bukit Jalil, Axiata Arena அரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி நடைபெறவிருக்கிறது.
நேரடி ஒளிப்பரப்பைக் கொண்ட இந்த பேரணியின் உள்ளடக்கத்தை இணைய வலைத்தள நிறுவனங்களின் பிரதான நிறுவனமான META அகற்றாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவாதத்தை META- வின் உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருப்பதாக Fahmi குறிப்பிட்டார். நேரடி ஒளிபரப்பு, சமூக வலைத்தளங்களில் குறிப்பாக தலைவரின் சமூக வலைத்தளத்திலும், பிற ஊடகங்களிலும் எவ்வித இடையூறின்றி சுமூகமாக ஒளியேற்றம் காண்பதற்கு அந்த உயர் அதிகாரி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக Fahmi குறிப்பட்டார்.
அண்மையில் ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் Ismail Haniyeh படுகொலை தொடர்பில் பிரதமர் அன்வாரின் கண்டன பதிவுகள், Ismail Haniyeh-வுடன் பிரதமர் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்பட காட்சிகள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட இதர கருத்துகளை சமூக வலைத்தளங்களிலிருந்து META அகற்றியது பெரும் கண்டன கணைகளுக்கு இலக்கானது. .
அது போன்ற ஒரு சம்பவம் நாளை நடைபெறும் பேரணி நிகழ்விலும் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே META-விடமிருந்து முன்கூட்டியே இந்த உத்தரவாதம் பெறப்பட்டுள்ளதாக Fahmi தெளிவுபடுத்தினார்.








