பாரிட் புந்தார், நவ.14-
பேரா, பாரிட் புந்தார், கோல குவாவ்- வில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித்தள்ளியப் பின்னர் மிக சாதுரியமாக தப்பிச் சென்ற வெள்ளை நிற காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் இந்த அராஜக செயல் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து 48 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அடையாளம் காணப்பட்டு வளைத்துப் பிடிக்கப்பட்டதாக கிரியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனா யூசோப் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் புகார் பெறப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வெள்ளை நிற கார், இதற்கு முன்பு மற்ற வாகனங்களை மோதித்தள்ளியது.
இதனைத் தொடர்ந்து அந்த காரை தடுத்து நிறுத்துவதற்கு 37, 40 வயது மதிக்கத்தக்க இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் முற்பட்ட வேளையில் அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் மோதித்தள்ளி விட்டு, அந்த வெள்ளை நிற காரோட்டி லாவகமாக தப்பியுள்ளதாக ஜுனா யூசோப் குறிப்பிட்டார்.








