லங்காவியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த வேலை இல்லாத ஆடவர் ஒருவர், நேற்று பாடாங் மாட்சிராட் பகுதியில் உள்ள தனது வாடகை அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று மாலை 6.55 மணியளவில் அந்த நபரின் உறவினர், அவரைத் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
பலமுறை தொலைபேசியில் அழைத்தும் பதில் கிடைக்காததால், வீட்டு உரிமையாளர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அவர் படுக்கையில் அசைவின்றி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அஸார் நுருடின் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட சோதனையில் உடலில் காயங்களோ, குற்றச்செயல் நடந்ததற்கான அறிகுறிகளோ காணப்படவில்லை.
பெர்லிஸ் மாநிலம் கங்கார் பகுதியைச் சேர்ந்த 37 வயதான கைரோல் இக்மால் ரோஹிடின் என அடையாளம் காணப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் மாலிகா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








