ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி, தாமான் டேசா செஜாத்தேராவில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாக வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 70 வயது மனைவியை பராங் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் பெண் ஒருவர் தனது வீட்டில் காயமடைந்து, ரத்தம் வழிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து கோத்தா திங்கி மாவட்ட போலீசார் அங்கு விரைந்தனர்.
இந்நிலையில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவரது கணவர் தாக்கியதில், அப்பெண்ணின் வலது கையில் காயம் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சீராக உள்ளார்.
இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








