கோலாலம்பூர், பிப்ரவரி.11-
பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஏர்ஏசியா எக்ஸ், தனது சர்வதேச விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் இருந்து பஹ்ரைன் வழியாக லண்டன் Gatwick விமான நிலையத்தை இணைக்கும் புதிய வழித்தடத்தை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கப்படவுள்ள இந்தச் சேவை, ஆசியாவிற்கு வெளியே பஹ்ரைனை ஏர்ஏசியாவின் முதல் மையமாக மாற்றுகிறது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை எளிதாக இணைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏர்ஏசியா மீண்டும் லண்டன் நகருக்கு தனது சேவையைத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு லண்டன் Gatwick மற்றும் Stansted விமான நிலையங்களுக்கான நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த வழித்தடம் புத்துயிர் பெற்றுள்ளது. தனது ஏர்பஸ் A330 ரக விமானங்களைக் கொண்டு இந்தச் சேவையை ஏர்ஏசியா வழங்கவுள்ளது.








