தபோங் ஹாஜி, ஃபெல்டா போன்ற நிறுவனங்களை அவற்றின் இஸ்லாமிய அடையாளத்தின் காரணமாக அரசாங்கம் குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.
தாபுங் ஹாஜி நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இஸ்லாமிய அடையாளத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தை குறிவைக்கும் நோக்கத்தைக் கொண்டவை அல்ல என்று அவர் எடுத்துரைத்தார்.
மாறாக, தாபுங் ஹாஜியில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றைச் சரிசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
தாபுங் ஹாஜி உட்பட எந்தவொரு அரசு நிறுவனத்தின் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
தாபுங் ஹாஜிக்கு எதிரான விசாரணைகளும் நடவடிக்கைகளும் அந்த நிறுவனம் இஸ்லாமிய அடையாளத்தைக் கொண்டிருப்பதாலேயே மேற்கொள்ளப்படுவதாக சில இஸ்லாமியத் தலைவர்கள் சித்தரிப்பது வருத்தமளிப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
மலாய் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குறிவைக்கப்படுவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், அவை அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதாலேயே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.
நாங்கள் ஒரு பிரச்சினையைக் கண்டறிந்தால், அதற்கு நடவடிக்கை எடுப்போம். இதை இனம் அல்லது மதம் சார்ந்த பிரச்சினையாகச் சித்தரிக்க வேண்டாம்.
அது மலாய் நிறுவனமா அல்லது அரசு நிறுவனமா என்பதை நாங்கள் பார்ப்பதில்லை. பிரச்சினை இருந்தால், அதற்கு நடவடிக்கை எடுப்போம். இதை இன அல்லது மதப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம், என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய நிறுவனங்கள் நியாயமற்ற கண்காணிப்பை எதிர்கொள்கின்றன என்றும், முஸ்லிம்களிடையே ஊழலுக்கு எதிராக நம்பிக்கை ஒரு தடையாகச் செயல்படுகிறது என்றும் வாதிட்ட பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றுகளுக்கு அன்வார் பதிலளித்தார்.
பெல்டா அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.








