Feb 24, 2026
Thisaigal NewsYouTube
ஸாஹிட்  மீதான 47 குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, தான் உருவாக்கிய யாயாசான் அகால்பூடி நிதி தொடர்பான 47 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறுவதற்காகத் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு, அரசு வழக்கறிஞர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்திற்கு எதிராகச் சட்டத்துறை அலுவலகம் எந்தவோர் எதிர்ப்பு மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாடியுஸ் ஸாமான் அஹ்மாட் தெரிவித்தார்.

47 குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை முழுமையாக விடுவிக்குமாறு அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று சட்டத்துறை அலுவலகம் தனக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே ஸாஹிட்டின் இந்த விண்ணப்பத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் இவ்விவகாரத்தை நீதிமன்ற முடிவிற்கே தாம் விட்டு விடுவதாகவும் பாடியுஸ் ஸாமான் குறிப்பிட்டார்.

அதே வேளையில் ஸாஹிட்டின் இந்த விண்ணப்பத்திற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி Nurulhuda Nur'aini Mohamad Nor, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் இப்போதைக்கு எந்தவொரு முடிவும் எடுக்க இயலாது என்று குறிப்பிட்டார்.

காரணம், ஸாஹிட்டுக்கு முன்பு வழங்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாத விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கின் முடிவு தெரியும் வரை, தனது தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி Nurulhuda Nur'aini அறிவித்தார்.

Related News