கணவர் கடனைத் திரும்பச் செலுத்தாததால் கும்பல் ஒன்று அவரின் மனைவியைக் கடத்தி பத்து நாட்களுக்கு அடைத்து வைத்திருந்ததோடு அவரை ஊசியால் குத்தியும் சிகிரெட்டினால் சுட்டும் சித்திரவதை செய்துள்ளது.
இந்தோனேசியரான அந்த ஆடவரிடமிருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியைப் திரும்பப் பெறும் நோக்கில் இந்தோனேசியாவின் மேடானை பூர்வீகமாகக் கொண்ட அவரின் மனைவியை கடத்திய அக்கும்பல் பினாங்கு உள்பட பல்வேறு இடங்களில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
குத்தகையாளரான அந்த இந்தோனேசிய ஆடவர் வர்த்தகம் தொடர்பில் உள்நாட்டு ஆடவரிடம் பெற்றிருந்த கடனைத் திரும்பச் செலுத்தாத நிலையில் கடந்த 7ஆம் தேதி தன் மூன்று தோழிகளுடன் பினாங்கு பாயா தெருபோங்கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த அவரின் மனைவியை மூவர் கொண்ட கும்பல் கடத்தியதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ கவ் கோக் சின் கூறினார்.
எனினும், அந்த பெண்ணின் தோழிகளை விடுவித்த அந்த கும்பல், அப்பெண்ணை பட்டர்வெர்த்திற்கு கொண்டுச் சென்று அடைத்து வைத்தது. இந்த கும்பலின் பிரதான மூளையாகச் செயல்பட்ட நபர் இந்தோனேசியாவில் இருந்த அப்பெண்ணின் கணவரிடம் பிணைத் தொகை கோரியுள்ளார் என்று டத்தோ கவ் சொன்னார்.
. தனது மனைவியின் பாதுகாப்பு கருதி அந்த நபர் உடனடியாக மலேசியா வந்துள்ளார் என டத்தோ கவ் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநிலத்தின் கின்ராரா போலீஸ் நிலையத்தில் இம்மாதம் 15ஆம் தேதி அந்த ஆடவர் புகார் செய்ததைத் தொடர்ந்து அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக ஓப் ஸ்கோர்ப்பியோன் எனும் நடவடிக்கையை போலீசார் தொடக்கி வெற்றியும் பெற்றதாக டத்தோ கவ் குறிப்பிட்டார்.








