நாட்டின் 219-ஆவது அரச மலேசிய போலீஸ் தினத்தை முன்னிட்டு, போலீஸ் படையில் பணியாற்றும் இந்து அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான வருடாந்திர சிறப்பு வழிபாடு கோலாலம்பூர், புலாபோல் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை CID இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தலைமை தாங்கினார்.
சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில் புக்கிட் அமான் தலைமையகம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த சுமார் 500 இந்து போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பிற்காக பாடுபடும் போலீஸ் படையினரின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் நாட்டின் அமைதிக்காக வேண்டி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் ஆதரவுடன் இந்த சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
நிகழ்விற்கு தலைமையேற்று உரையற்றிய CID இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல், மலேசியாவின் பன்முகத்தன்மையே அதன் தனிச்சிறப்பு என்றும், போலீஸ் படையில் உள்ள அனைத்து மதத்தினரும் தத்தமது மத நம்பிக்கைகளின்படி வழிபாடுகளை மேற்கொள்வது படையினரிடையே ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்திற்குள் ஓர் ஆலயம் நிறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட முன்னாள் போலீஸ் அதிகாரி டத்தோ பரம், டத்தோ நரன் மற்றும் அவரிதம் குழுவினரின் சேவையை டத்தோ குமார் நன்றிபெருக்குடன் தமது உரையில் நினைவுகூர்ந்தார்.
நிகழ்வின் உச்சமாக வழிபாட்டுடன் இணைந்து, கல்வியில் சிறந்து விளங்கிய போலீஸ் அதிகாரிகளின் 15 பிள்ளைகளுக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் SPM, பல்கலைக்கழக உயர்கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தவிர பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகளான டத்தோ சண்முகமூர்த்தி சின்னையா, / டத்தோ மனோகரன்,/ டத்தோ சசிகலா தேவி சுப்பிரமணியம் ஆகியோர் டத்தோ குமார் தம்பதியார் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் டத்தின் சாந்தி பி. சந்தானம் பிள்ளை, முன்னாள் டிசிபி டத்தோ எம்.வி. ஸ்ரீகுமார் மாதவன் நாயர் மற்றும் எஸ்ஏசி ஜி. சீதா தேவி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.











