கோலாலம்பூர், டிசம்பர்.15-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி, மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேலிடம் இருந்து கைநழுவியதா? என்று அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ விவகாரத்தை முன்னெடுத்துள்ள அரசு சாரா இயக்கமான ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சி.ஐ.டி. டத்தோ குமாரின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அருண் துரைசாமி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த சம்பவத்தை விசாரணை செய்வதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், சிறப்புக் குழுவை அமைத்து இருப்பதாக டத்தோ குமார் அறிவித்து இருந்தார்.
அதனை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதிப்படுத்தியுள்ளார். டத்தோ குமார் அறிவித்து இருப்பதைப் போல புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை புக்கிட் அமான் தலைமையகம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்ட பின்னர் இந்த வழக்கில் முக்கியக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட எட்டு போலீஸ்காரர்கள் மற்றும் மலாக்கா போலீஸ் துறை ஆகிய மூன்று தரப்பினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய முக்கியக் குற்றவாளிகள் ஆவார்.
இந்த வழக்கை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட பின்னர் மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் எவ்வாறு தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட முடியும் என்று அருண் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கு முடியும் வரை மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் மற்றும் எட்டு போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டிய முக்கிய சந்தேகப் பேர்வழிகள் ஆவர் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
காரணம், அந்த மூன்று இந்திய இளைஞர்கள், பாராங்கைக் கொண்டு வெட்ட வந்தார்கள் என்று ஒரு பொய்யான் குற்றச்சாட்டை முன்வைத்து, கத்திகளை ஆதாரமாகக் கொண்டு செய்தியாளர் கூட்டத்தை மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் நடத்தி இருக்கிறார்.
நாட்டில் பொதுமக்களின் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய மலாக்கா போலீஸ் தலைவர், ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, கதையை ஜோடித்து இருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முதலாவது குற்றச்சாட்டுக்கு உரியவரான மலாக்கா போலீஸ் தலைவர், தொடர்ந்து நெஞ்சுரத்துடன் துணிந்து கருத்துரைக்கிறார் என்றால், இந்த வழக்கு புக்கிட் அமான் சிஐடி தலைவர் தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவிட்டது என்பதே அர்த்தமாகும்.
இதற்கு டத்தோ குமார் அல்லது போலீஸ் படைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல், இந்தச் சம்பவம் குறித்து ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, கதையை திரித்து இருக்கும் போலீஸ்துறைக்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெறும் என்று அருண் துரைசாமி சவால் விட்டுள்ளார்.








